Vellore Lok Sabha Election :
வேலூர்: வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. தேர்தல் வாக்குபதிவை தொடர்ந்து மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குப்பதிவை அளித்து வருகின்றனர்.
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 – ஆம் தேதி(இன்று) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் 11 ஆம் தேதி தொடங்கி கடந்த 18 ஆம் தேதி முடிவடைந்தது.
இதில் தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உட்பட 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மேலும் அமமுக, மநீம உள்ளிட்ட சில கட்சிகள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், திமுக மற்றும் அதிமுக இடையே நேரடி போட்டி உள்ளது. இந்நிலையில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து, வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,553 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,919 கட்டுப்பாட்டுக் கருவி, 3,853 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 2,099 வி.வி.பேட் இயந்திரங்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெளியானது நேர்கொண்ட பார்வையின் முதல் விமர்சனம் – ரசிகர்களுக்கு ஏமாற்றமா? கொண்டாட்டமா?
இந்நிலையில் இன்று (05.08.19) தேர்தலையொட்டி, வாக்குச் சாவடிகளுக்குள் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பணி அலுவலர்கள், அரசியல் கட்சி முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. தங்கள் வாக்கை பதிவு செய்ய காலை முதல் பொதுமக்கள் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
வேலூர் மக்களவை தொகுதி வாக்குப்பதிவையொட்டி 3,957 போலீசார், 1,600 துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மொத்தமுள்ள 1,553 வாக்குச்சாவடி மையங்களில் 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வாக்குபதிவுக்காக இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.