Tamilnadu Government About Nivar Cyclone Update : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இவர் என்ற அதி தீவிர புயலாக உருமாறி நேற்று இரவு முதல் அதிகாலை வரைக்குள் மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே முழுமையாக கரையை கடந்தது.
இந்த புயலால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. இருப்பினும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இது ஒருபுறமிருக்க நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள், பயிர்சாதம் மற்றும் கால்நடை உயிரிழப்புகள் என்னென்ன என்பது குறித்த முழு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தப் புயலால் 3 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் 26 உயிரிழந்துள்ளன.
புயலால் மொத்தம் 19 மின் கம்பங்கள் சேதம் அடைய அவை அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் 380 மரங்கள் சேதமடைய அவைகளும் உடனடியாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது.
3085 முகாம்களில் மொத்தம் 2,27,317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 93,030 பேர் எனவும் பெண்கள் 94,105 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவிலான பாதிப்பு மற்றும் உயிர் சேதம் ஆகியவை தவிர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.