மக்கள் வீட்டிலிருந்தே குறைகளை பதிவு செய்யவும் அந்த குறைகளை விரைந்து தீர்த்து வைக்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
Tamil Nadu Government New Plan : தமிழகத்தில் தற்போது மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது.
முதல்வர் பழனிசாமி அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் அதிமுக அரசின் நலத்திட்டங்களில் வீழ்ச்சி ஏற்படவில்லை என்று தான் கூறவேண்டும்.
அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்கள் வீட்டிலிருந்து குறைகளை கூறவும் அந்த குறைகளை தீர்த்து வைக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அது குறித்த முழு விவரம் இதோ
மக்கள் குறைதீர்ப்பின் அவசியத்தை உணர்ந்து, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு.
தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறைவாரியான மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றன.
மாவட்ட அளவில் திங்கள் கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், அம்மா திட்டக் குறைதீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் போன்றவையும், மாநில அளவில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுகள் காணப்படுகின்றன.
இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றிற்குத் தீர்வு காண இந்த ஒருங்கிணைந்த மையம் உதவிபுரியும்.
இந்த மையம் மூலம் வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகள், விரைவாக மேற்கொள்ளப்பட்டு, தேவையான இடங்களில் திறன் பயிற்சி வழங்கப்படும்.
முதற்கட்டமாகத் தகவல் தொழில் நுட்பத் துறையின் மூலம் ரூ.12.78 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும்.
முதலமைச்சரின் உதவி மையம் , முதலில் 100 இருக்கைகள் கொண்ட உதவி மையமாகச் செயல்படும். பின்னர் தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும்.
மக்கள் தங்களது, அரசுத்துறைகள் தொடர்பான தனது குறைகளை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த தகவல்கள் மூலம், முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் மூலம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விரைந்து தீர்வு காண வழிவகை செய்யப்படும்.
இதுவரை மாவட்டம் மற்றும் தாலுகா வாரியாக பதிவு செய்யப்பட்டு வந்த இந்த குறைதீர்க்கும் முறை, மொத்தமாக இந்த மையம் மூலம், மாநில அளவிலாக ஒன்றிணைக்கப்பட உள்ளது.
தமிழக முதல்வரின் இந்த அதிரடியான திட்டத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.