சிவகங்கை மாவட்ட சேர்மன் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sivagangai Chairman Election : சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் 4 முறை ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட சேர்மன் தேர்தல் இறுதியாக இன்று நடைபெற்ற நிலையில் அதிமுகவை சேர்ந்த பொன்மணி பாஸ்கர் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றார்.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 8 இடங்களை அதிமுகவும் 6 இடங்களை திமுகவும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களையும் பிடித்து அதிமுக, திமுக சம பலத்தை பெற்றிருந்த நிலையில் மாவட்ட சேர்மன் பதவிக்கான தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை பெரும்பான்மை நிரூபிக்கப்படாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர். இதில் இரண்டு வார காலத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் கடந்த 4 ஆம் தேதி தேர்தல் நடத்த அறிவித்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்த முதல்வரின் ஆய்வு பணி காரணமாக மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதுடன் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலானது மறைமுக வாக்குப்பதிவு முறையில் நடைபெற்றது.
இதில் அதிமுக சார்பில் சேர்மன் வேட்பாளராக பொன்மணி பாஸ்கரும் திமுக சார்பில் நாகனி செந்தில் குமாரும் போட்டியிட்ட நிலையில் இருவரும் சம பலமான வாக்குகளையே பெற்றனர். இதனை தொடர்ந்து குலுக்கல் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிமுகவை சேர்ந்த பொன்மணி பாஸ்கரே வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து மாவட்ட சேர்மன் பதவியை அதிமுகவே கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.