Sarath Kumar :
மக்களை விட்டு விலகி நிற்கும் எந்த ஒரு அரசும் தேர்தலில் தோல்வியையே சந்திக்கும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.இதில் 114 தொகுதிகள் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேலும் தேர்தல் முடிவுகளில், பாஜக சொல்லி கொள்ளும் அளவுக்கு வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை அக்கட்சி புத்துணர்வோடு எதிர்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.
இந்நிலையில், 2014ம் ஆண்டு பாஜக மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் சமீப காலமாக குறைந்துகொண்டே வருகின்றன” இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் மீதான மக்களின் அதிருப்தியே இத்தேர்தலில் எதிரொலித்து, ஆட்சிப்பொறுப்பில் இருந்த பாஜகவின் தோல்விக்கு காரணமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இதன் மூலம் நமக்கு தெரியவருவது, “மக்களை விட்டு விலகி நிற்கும் எந்த ஓர் அரசும், தேர்தலில் தோல்வியைச் சந்திக்கவேண்டி வரும்” என்னும் மக்கள் மன்ற தீர்ப்பு மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது…” இவ்வாறு அறிக்கையில் அரசு குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.