சென்னை: சுஜித் மீட்புப் பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் மரணம் தமிழகத்தை நிலை குலைய வைத்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த குழந்தை சுஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் 4 நாட்களாக நடந்தும், குழந்தையை மீட்கும் பணி இறுதியில் தோல்வியில் முடிந்தது. குழந்தை சுஜித் மரணம் அறிந்து மக்களும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் குழந்தை சுஜித் மரணம் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “குழந்தை சுஜித் மீட்புப் பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும். மேலும் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதே நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” என கூறினார்.
மேலும் குழந்தை சுஜித் போன்று இன்னொரு மரணம் இனி ஏற்படக்கூடாது என அரசு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.!! எனவும் தெரிவித்துள்ளார்.