Rajkiran Comment on Kantha Sasti Kavasam : கந்த சஷ்டி கவசத்தில் ஆபாசம் இருப்பதாக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில் நடிகர் ராஜ்கிரன் இதுகறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக் கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம்.
முருகப்பெருமானை நம்புவோர்க்கு, “கந்தர் சஷ்டி கவசம்” என்பது, “ஒரு பாதுகாப்பு அரண்”.
இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல் பூர்வமான, மனோதத்துவ ரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன.
இறைவனை நம்பாதோர்க்கு, “நம்பாமை” என்பது, அவர்களின் சுதந்திரம்.
நம்பிக்கை கொண்டோர்க்கு, “நம்புதல்” என்பது, அவர்களின் சுதந்திரம்.
இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மையானது.
தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது.
இந்த கொடிய கொரோனா கால கட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதார சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில், யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம் இருப்பதாகவே நினைக்க தோன்றுகிறது என கூறியுள்ளார்.
நடிகர் ராஜ்கிரணின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகின்றன.