பேருந்தில் வந்த காவல் அதிகாரிகளிடம் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது காவல் அதிகாரி தமிழரசன் மற்றும் மகேஷ் ஆகியோர் ஒரு கைதியை பேருந்தில் அழைத்து சென்றனர். அப்போது நடத்துனர் அவர்களிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு நாங்கள் போலீஸ் டிக்கெட் எடுக்க முடியாது என அவர்கள் மறுத்துள்ளனர். சரி ஆதாரத்திற்கு வாரண்ட் காப்பியை கொடுங்கள் என நடத்துனர் கேட்டுள்ளார்.
ஆனால், வாரண்ட் இன்னும் எழுதவில்லை. எழுதி தருகிறோம் என அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், வெகுநேரமாகியும் வாரண்ட் காப்பியை நடத்துனரிடம் அவர்கள் கொடுக்கவில்லை எனத்தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்கும், நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த போலீசார் நடத்துனரை தாக்கியுள்ளனர். இதில், கண்ணுக்கு அருகே காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
இதையடுத்து, வாரண்ட் கேட்டதால் தான் தாக்கப்பட்டதாக நடத்துனர் வீடியோ வெளியிட்டுள்ளார். இதையத்து, இரு காவலர்களையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.