PM Modi condoles the death of Former Chief Election Commissioner Tn Seshan
PM Modi condoles the death of Former Chief Election Commissioner Tn Seshan

டெல்லி: மறைந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, பிரதமர் மோடி டி.என். சேஷன் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் நேற்று உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தமிழகத்தை சேர்ந்த டி.என். சேஷன் ஐஏஎஸ் முடித்து மத்திய அரசில் பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்தியாவின் 10வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990- 96ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். தேர்தல் ஆணையராக இருந்த காலகட்டத்தில் தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்துவது மற்றும் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். மேலும் பல அரசியல் கட்சிகள் விமர்சித்தாலும் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் தன் தேர்தல் சீர்திருத்தப்பணியில் தீவிரமாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டி.என். சேஷன், நேற்றிரவு 9.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டி.என். சேஷன் மறைவுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “டி.என். சேஷன் ஒரு திறமையான அரசு பணியாளர். அவர் இந்திய நாட்டிற்காக மிகுந்த அக்கறையுடனும், ஒருமைப்பாட்டுடனும் பணியாற்றியவர். தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கிய அவரது முயற்சிகள் நமது ஜனநாயகம் வலிமை பெறவும் மற்றும் முடிவு எடுப்பதில் பலரும் பங்கேற்கும் வகையிலும் அமைந்தன. அவரது மறைவு வேதனை அளிக்கிறது. ஓம் சாந்தி” இவ்வாறு டிவிட்டரில் இரங்கலை தனது தெரிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் டி.என்.சேஷன். தைரியம் மற்றும் நம்பிக்கையின் உருவமாக நினைவுக்கூறப்படுபவர்’ என தெரிவித்துள்ளார்.