OPS about Karunanidhi – சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று சட்டபேரவையின் 2-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அப்பொழுது, கலைஞருக்கான இரங்கல் குறிப்பை துணைமுதல்வர் ஓபிஎஸ் சபையில் வாசித்தார்.
அதில் கூறியதாவது, “சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர், பன்முகத்திறமை கொண்டவர் கலைஞர் கருணாநிதி. கட்சியிலும், ஆட்சியிலும் மன உறுதியுடன் அவர் செயல்பட்டார்.
அதோடு மட்டுமின்றி, நெருக்கடி காலத்தில் திறமையாக செயல்பட்டவர். மன உறுதியும், தன்னம்பிக்கையும் தன்னகத்தே கொண்ட தலைவர் கலைஞர் ஆவார்” என கருணாநிதி குறித்து பெருமையுடன் பேசினார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “கலைஞரின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை.
இந்திய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்தவர் கலைஞர். சுதந்திர நாளன்று முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர்.
மேலும் அரசியலை கடந்து கலைஞர் மீது எம்ஜிஆர், ஜெயலலிதா அன்பு கொண்டிருந்தனர் என குறிப்பிட்டார்.
மேலும் அண்ணா மீது பற்றுக்கொண்ட கலைஞர் சமூக நீதிக்காக அரும்பணி ஆற்றினார்” என ஓபிஎஸ் பேரவையில் கலைஞர் கருணாநிதி குறித்து புகழ்ந்து பேசினார்.
இதேபோல் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும் தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பரிதி இளம்வழுதி உள்ளிட்ட 12 முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவித்தனர்.
பின்னர் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.