நிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Nivar Cyclone Relief Announcement : தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த வாரத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நிவர் என்ற பெயரில் புயலாக மாறி மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது.
இதன் காரணமாக சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த புயலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 61 மாடுகள், 5 எருதுகள், 65 கன்றுகுட்டிகள், 114 ஆடுகள் உயிரிழந்தன.
புயலால் பாதிக்கப்பட்ட 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் புயலால் சேதமடைந்த பயிர்களை முறையாக கணக்கிட்டு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு அதற்கான தொகையை பெற்றுத் தருமாறும் அறிவுறுத்தி உள்ளார்.