MK Stalin and EPS – மதுரை: மதுரை வண்டியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது எடப்பாடிபழனிசாமி பேய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
மதுரை வண்டியூரில், மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் தமிழநாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது, ‘தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி செய்யாமல், பேய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும், தமிழ்நாட்டில் ஒரு நகரில் கூட ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் தமிழகத்தில் உதவாக்கரை ஆட்சி நடைபெறுகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி குறித்து குற்றம் சாட்டியுள்ளனர்’ .
மேலும் கோவையில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு உள்ளார், தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு சீரழிந்துவிட்டது என குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமின்றி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கெட்டுப்போன ரத்தம் ஏற்றப்பட்டதால் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சி கெட்டுப்போன ஆட்சி என்பதற்கு இதுவே சான்று எனவும் ஆவேசமாக கூறினார்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.
ஆனால் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது இந்த மோடி ஆட்சியில்.. “வேலை கேட்கும் இளைஞர்களை பக்கோடா விற்க சொல்லிக்கொண்டிருக்கிறது மோடி அரசு, பிரதமர் மோடியால் நாடு வளர்ச்சி அடையவில்லை.. மாறாக தளர்ச்சிதான் அடைந்திருக்கிறது” இவ்வாறு கூறினார்.