MK.Stalin and Edappadi Palanisamy :
சென்னை: வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இன்று போட்டி பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபடுகின்றனர்.
பண பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 5- ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
மேலும் வாக்கு எண்ணிக்கை 9-ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக களம் இறங்கியவர்களையே அ.தி.மு.க., தி.மு.க. களம் இறக்கியுள்ளது.
அதன்படி அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் அக்கட்சி பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் பிரசாரத்தில் அனல் பறக்கிறது.
எனவே அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரும் வேலூரில் முகாமிட்டு வெற்றிக்கான வியூகத்தை வகுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை வெற்றி பெற வைக்க அக்கட்சி நிர்வாகிகள் அனைவரும் வேலூரில் குவிந்துள்ளனர்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் உள்ளடங்கிய 6 சட்டசபை தொகுதிகளிலும் குழு அமைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. எனவே வேலூரில் இறுதிகட்ட பிரசாரம் சூடுபிடித்து வருகிறது.
பழங்குடியின மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு வசதி.. முதற்கட்டமாக ரூ.50 கோடி..!
இந்நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை 5 மணிக்கு அணைக்கட்டு சட்டசபை தொகுதியிலும், மாலை 6 மணிக்கு வேலூர் சட்டசபை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.
அதேபோன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் மாலை 4 மணிக்கு குடியாத்தம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட உமராபாத், பேரணாம்பட்டு, கமலாபுரம், எர்த்தாங்கல், காந்தி சவுக், குடியாத்தம் (பஸ் நிலையம்), பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.