சென்னை: “உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தகவல் தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் நடிகர் கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் அளித்த பேட்டியில், ‘என் அப்பாவிற்கு சிலை வைத்ததை அவர் விரும்பியது கிடையாது. அவர் இப்போது இருந்தாலும் தனக்கு சிலை வைக்க வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பார். ஆனால் நான் அவருக்கு வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் பிரம்மாண்ட சிலை கிடையாது., அந்த சிலை அவரை போலவே இருக்கும். அமெரிக்க சிற்பி ஒருவர் இதை செய்து தந்தார்’ என கூறினார்.
தொடர்ந்து பேசிய கமல், பரமக்குடியில் ஒரு திறன் தொகுப்பு மையம் அமைக்கிறோம்.. திறன் தொகுப்பு மையம் என் அப்பாவின் விருப்பம்., எனவே அப்பா இருந்திருந்தால் இதற்கு பெருமை அடைந்திருப்பார் என தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, “உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். உள்ளாட்சி தேர்தலுக்கு நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். மேலும் நாங்கள் அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்” என்று கூறினார். அதை தொடர்ந்து, மருதநாயகம் படம் தயாராக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதில் நான் நடிப்பேனா என்பது சந்தேகம் எனவும் தெரிவித்துள்ளார்.
@@@வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல்… இதன் பின்னணி என்ன.?!!
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தமிழக அரசு மீண்டும் பரோல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஏற்கனவே பரோலில் வெளிவந்த பேரறிவாளனுக்கு தமிழக அரசு மீண்டும் பரோல் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன், கடந்த 26 ஆண்டுகளில் பரோல் மூலம் ஒரு நாள்கூட வெளியே வந்ததில்லை. இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு தனது தந்தை மற்றும் சகோதரி உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அவருக்கு 2 மாத பரோல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தந்தை குயில்தாசனின் உடல்நலம் குறித்து கவனிக்க பேரறிவாளன் ஒரு மாதம் மீண்டும் பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, பேரறிவாளன் தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தண்டனை காலகட்டத்தில் பேரறிவாளனுக்கு வழங்கப்படும் 2-வது பரோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரும் நவம்பர் 11-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பேரறிவாளனின் ஒரு மாத கால பரோல் தொடங்குகிறது. மேலும் தனது ஆயுட்கால தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளனின் இந்த 2 -வது பரோல் தமிழகத்தில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.