பள்ளிகள் திறப்பு, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என பல்வேறு புதிய தளர்வுகள் உடன் ஊரடங்கு உத்தரவு பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Unlock Details for February : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
பொது ஊரடங்கு உத்தரவில் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இப்படியான நிலையில் தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் அனைத்து மாணவர்களுக்கும் பிப்ரவரி 8 முதல் வகுப்புகளை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகளுக்கு இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 1 முதல் நேரக் கட்டுப்பாடு இன்றி இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் நாளை முதல் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் செயல்படவும், கண்காட்சிகளை நடத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகள் தமிழகம் முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.