சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓட்டு சீட்டுகள், ஓட்டு பதிவுக்கான நேரம் முதலியவை குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்குபதிவு நேரம் காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஊராட்சிகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டின் வண்ணமும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவின் போது வெள்ளை அல்லது நீல நிற வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவில் பிங்க் வண்ண வாக்குச்சீட்டும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கான வாக்குப்பதிவில் பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் மஞ்சள் நிற வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்பட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 9 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்குச்சீட்டு என்ற வகையில் அச்சிடப்பட உள்ளது. குறிப்பாக தமிழ் அகர வரிசைப்படி, வேட்பாளர்களின் பெயர் அச்சிடப்பட்டு அவரது பெயருக்கு அருகே தேர்தல் சின்னமும் அச்சிடப்பட்டு இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.