"Local election date will be announced within 15 days: OPS

சென்னை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் 15 நாட்களில் அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால், இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் தற்சமயம் செய்து வருகிறது. அதனை தொடர்ந்து, வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகள் அமைப்பது இதுபோன்ற நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் ஊராட்சி தவிர்த்து அனைத்து அமைப்புகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் அங்கீகரிப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ஊரக பகுதிகளில் 5 வண்ணங்களில் வாக்குசீட்டுகள் பயன்படுத்தப்படும் என்றும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்றதற்காக அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது: “இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும். நாங்குநேரி தொகுதி மக்களுக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் ” . இவ்வாறு தெரிவித்தார்.