திருவனந்தபுரம் : சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவிலில் பெண்கள் செல்ல தடை கோரி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தினர்.
இதை பார்த்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு செல்லவில்லை. போராட்டத்தினால் நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து சபரிமலை பாதுகாப்பு கமிட்டி 12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. மேலும் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.