Kerala Assembly Meet
Kerala Assembly Meet

Kerala Assembly Meet – திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை கண்டித்து, கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் மற்றும ஐயப்ப பக்தர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, மகரவிளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலையில் தற்போது நடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சன்னிதானத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், இந்த நடவடிக்கைகள் குறித்து கேரள சட்டசபையிலும் நேற்று அமளி துமளி ஆகியது. ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், ஏற்கனவே சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் கேரள சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது. சபரிமலை விவகாரம் குறித்து பேரவையில் ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அவை துவங்கியதும் தங்கள் இருக்கைகளில் எழுந்து நின்ற உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு சபரிமலை விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர் கேள்வி நேரத்தை துவங்கினார். எனினும், உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.