கருப்பர் கூட்டம் என்ற யூட்யூப் பக்கத்தின் தொகுப்பாளர் சுரேந்தர் நடராஜன் போலீசில் சரணடைந்துள்ளார்.
Karuppar Koottam Anchor Arrested : யூடியூப் பக்கத்தில் கருப்பர் கூட்டம் என்ற சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் இந்த சேனலில் உரிமையாளர் மற்றும் தொகுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மெங்கும் கோரிக்கைகள் வலுத்து வந்தது.
அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜகவினர் சென்னை காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளித்திருந்தனர். இதனால் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த விசாரணையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியை சேர்ந்த செந்தில் நாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தொகுப்பாளரான சுரேந்தர் நடராஜன் என்பவர் புதுச்சேரியில் அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் தமிழக போலீசில் சரணடைந்துள்ளார்.
போலீசில் சரண் அடைந்த இவர் தன் மீது திட்டமிட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக எண்ணி பாஜக என் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.
பாஜகவினர் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.