சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான கண்ணே கலைமானே படத்தை பற்றி இயக்குனர் சீனு ராமசாமி அவரது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
Kanne Kalaimane Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கண்ணே கலைமானே.
உதயநிதியுடன் தமன்னா இணைந்து நடித்திருந்த இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது சர்வதேச திரைப்படம் விருதான ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழாவின் 30வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ வென்றிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது,
“இது நம் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட சகோதரத்துவத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட, இது ஒரு அறிவூட்டும் செயல்முறையாக நினைக்கிறேன்.
மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எவரையும் தொட்டு விடும் ‘மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள்’ என்ற புதிய வகை சினிமாவை இதன் மூலம் நான் கண்டு கொண்டிருக்கிறேன்.
இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு முன்பே, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே படத்துக்கு கிடைத்த விமர்சன வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
விருதுகளை வென்ற படங்கள் ‘கலைப்படங்கள்’ என்று அழைக்கப்பட்ட காலங்களும், அவற்றிற்கு பொது மக்களிடையே சரியான அங்கீகாரம் இருக்காது என்றும் பேசப்பட்ட காலங்கள் இருந்தன.
ஆனால் ‘கண்ணே கலைமானே’ இரண்டையும் பெற்றிருப்பதை பார்க்கும் போது, எதிர்காலத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்க எனக்கு அதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது.
தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோருக்கும், ஒட்டு மொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.