K.S.Azhagiri Speech :
சென்னை: நமது மாணவர்கள் 2 மொழிகளை பயிலவே கஷ்டப்படுகிற நிலையில் மும்மொழியை எப்படி பயில்வார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, ‘இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஏற்கும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும் என்பதே காங்கிரஸின் கொள்கை’ என்று தெரிவித்தார்.
மேலும் “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள பாஜகவின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த உடனேயே அம்பலமாகியுள்ளது.
மேலும் புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையின்படி 6ம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்திமொழி திணிப்பை நீண்டகாலமாக எதிர்த்து போராடி தடுத்த வரலாறு உண்டு.
ஆனால் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 10, 12- ஆம் பாட திட்டத்தை மாற்றி அமைப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இதையும் மீறி புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் மும்மொழி திட்டத்தை புகுத்தி இந்தி மொழியை கட்டாயப்படுத்தி திணிக்க முயன்றால் மத்திய பாஜ அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியது வரும்” இவ்வாறு கூறினார்.
மேலும், ‘எந்த மொழியையும் எவர் மீதும் திணிக்கக்கூடாது, நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து மொழிகளும் சம அந்தஸ்துடன் நடத்தப்படவேண்டும்.
இந்தியாவில் எந்த ஒரு மொழியும் மற்ற மொழியை தாண்டி, தேசிய மொழியாக இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று முன்னாள் பிரதமர் நேரு கூறியதை எடுத்து கூறினார்.