தேர்தல் பிரச்சாரத்துக்காக ஐ-பேக் நிறுவனம் கொடுத்த ஐடியா திமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் தலைமையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
I-Pac Idea to DMK : 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யுக்திகளை வகுத்து கொடுப்பதற்காக தி.மு.க ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
சென்னை முதல் கடைக்கோடி வரை கிளை கழகங்கள் கொண்டு இயங்கும் மாபெரும் வரலாறு கொண்ட கட்சி தனது வெற்றிக்காக தனியார் நிறுவனத்தின் உதவியை நாடியது குறித்து தி.மு.க நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். ஆனால், தி.மு.க தலைமை அவர்களை சமாதானம் செய்ததை அடுத்து கட்சி நிர்வாகிகள் தங்களை சமரசம் செய்து கொண்டு ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்து வந்தனர்.
ஐ-பேக் நிறுவன ஊழியர்கள், கட்சி நிர்வாகிகளிடம் பிரச்சாரங்கள் தவிர வேறு பல நிகழ்ச்சிகளை நடத்த சொல்லி வற்புறுத்துவதாகவும் அதே சமயம் பொது மக்களை பார்த்து கை அசைக்க வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன செயல்களை செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும் மாவட்ட செயலாளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்தின் யோசனைகள் தி.மு.கவின் நற்பெயரை குறைப்பதாக அமைந்துள்ளதாகவும் அதே சமயம் ஐ-பேக் தரும் யோசனைகளை விட தி.மு.கவால் சிறப்பாக செய்லபட முடியும் என்றும் மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை சேலத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெரும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவசர அவசரமாக புதிய வியூகத்தை வகுத்து கொடுக்கும்படி ஐ-பேக்கை தி.மு.க வற்புறுத்தியது.
ஒரு நாள் முழுவதும் நேரம் எடுத்து கொண்ட ஐ-பேக், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்திய அதே “கிராம சபை கூட்டம்” மற்றும் “குற்ற பத்திரிக்கை” ஆகிய யோசனைகளை வழங்கியுள்ளது. சமீபத்தில் ஐ-பேக் நிறுவனம் கொடுத்த பிரச்சார யோசனைகள் ஏதும் மக்கள் மனதில் இடம் பெறவில்லை, ஏனெனில், இந்த யோசனைகள் அனைத்தும் தமிழ் தெரியாத ஹிந்தி மொழி பேசுபவர்களால் முடிவு செய்யப்பட்டதாகும்.
ஸ்டாலினின் “நமக்கு நாமே” பிரச்சார திட்டமே இதுவரை சிறந்த திட்டமாக தி.மு.கவினரே கருதுகின்றனர். இது ஐ-பேக் நிறுவனத்துடம் தி.மு.க ஒப்பந்தம் செய்வதற்கு முன் செயல்படுத்தப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தொண்டர்கள் வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அதே நேரத்தில், ஐ-பேக் நிறுவன ஊழியர்கள் வளாகத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கருப்புச்சட்டையுடன் அவர்கள் குழுமியிருந்தது, கட்சி தொண்டர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. தேர்தலில் தி.மு.கவை வெற்றி பெற செயல்படுவதை விடுத்து, தி.மு.கவை பயன்படுத்தி ஐ-பேக் நிறுவனம் தமிழகத்தில் காலூன்றி வருவதாகவும் தி.மு.க தலைவர்கள் புலம்புகின்றனர்.
ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு தி.மு.க தலைமை தற்போது வருந்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வரை அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், தி.மு.க வேறு வழியின்றி ஐ-பேக்குடன் கைகோர்த்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனவும் கூறப்பட்டு வருகிறது.