Farmers Wishes to CM Edappadi Palanisamy : அவ்வையாரின் இந்த அமுத மொழியை இன்றைக்கு தமிழகத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. காலம் தனக்களித்த முதலமைச்சர் பதவியை முழுக்க முழுக்க அவர் மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தி வருவது கண்கூடான உண்மையாகும்.
விவசாய பூமியான தமிழகத்தில் அந்தத் தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்தது. இதற்கு அடிப்படை காரணம் தண்ணீர் தட்டுப்பாடு என்கிற உண்மையை உணர்ந்து கொண்ட எடப்பாடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கினார்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை தரணியை செழிப்புள்ளதாக மாற்ற காவிரி பிரச்சனையில் தமிழக அரசு மேற்கொண்ட அசுர முயற்சிகள், மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளன.
தமிழக அரசின் தொடர் முயற்சிகளால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கு உரிய நியாயமான பங்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள், ‘பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்’ ஆக மாற்றப்படும் என்கிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு, அவருக்கு தமிழக வரலாற்றில் அழியா புகழை பெற்றுத் தந்திருக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
சரி.., தஞ்சை மட்டும் வளம் பெற்றால் போதுமா? தமிழகத்தின் மற்ற பகுதிகள் பற்றியும் சிந்தித்தார் முதல்வர். அந்த சிந்தனையில் உதித்த சிறந்த திட்டம் தான் ’குடிமராமத்துத் திட்டம்’.
தமிழகம் முழுவதும் பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீராதாரங்களையும் தூர்வார, குடிமராமத்து என்ற திட்டம் துவங்கப்பட்டு இதுவரை ரூபாய் 930.25 கோடியில் 4,965 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக 83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரப்பட்டு, 2,37,492 கனமீட்டர் வண்டல்மண் 1,846 பயனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதால், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி இனி விவசாயம் செழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமா! விவசாயிகளின் 60 ஆண்டு கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகள் ரூபாய் 1,652 கோடியில் நடந்து வருகின்றன. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து மீட்டெடுக்க ரூபாய் 11,250 கோடியில், ‘நடந்தாய் வாழி காவேரி திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
’’தமிழக முதல்வர்களாக பதவி வகித்தவர்களில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே விவசாய பின்னணியைக் கொண்டவர் இதனால் எங்களின் பிரச்சனைகள் அவருக்கு அத்துப்படி. இந்த அடிப்படையிலேயே அவர் எங்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதற்காக நாங்கள் அவருக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்’’ என பூரித்துப் போய் சொல்கிறார்கள் விவசாயிகள்.