fani cyclone :
புதுடெல்லி: அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.இதனால் கடும் புயல் உருவாக வாய்ப்புள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
மேலும் சென்னைக்கு தென் கிழக்கே 1210 கி.மீ. தொலைவில் வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
முன்னதாக, இலங்கையை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம், மத்திய தரைக் கடல் பகுதியில் புதியதாக ஒரு காற்று சுழற்சி நிலை உருவானது.
அது தற்போது வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியுள்ளது. மேலும் நேற்று முன்தினம் அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது, பின்னர் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
தற்சமயம் இது மேலும் வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புயலுக்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 29ம் தேதி தமிழக கடலோரப் பகுதியில் அந்த புயல் வரும் போது, தமிழக கடலோரப் பகுதியில் பலத்த இடியுடன், சூறைக்காற்று வீசும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக கடலோரப் பகுதியில் நேற்று பல்வேறு இடங்களில் கடலில் கடுமையான கடல் சீற்றம் நிலவியது.
நேற்று முன்தினம் இரவு முதலே கடலில் மணிக்கு 40 -50 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.
தற்போது புயல் தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்வதால் கடலில் மேலும் பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.