ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என திருவண்ணாமலையில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
EPS Speech in Thiruvannamalai : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று அனைத்து பகுதிகளிலும் ஓட்டு சேகரித்து வருகிறார் முதல்வர் பழனிசாமி. அந்த வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது ஆரணி தொகுதியில் பேசிய முதல்வர் பழனிசாமி நெசவாளர்கள் அதிகம் வாழும் பகுதி இது. வீடு, நிலம் என இரண்டும் இல்லாத நெசவாளர்களுக்கு அரசே இடம் வாங்கி வீடு கட்டித்தரும் என கூறினார். அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு வழங்கப்படும் 750 இலவச யூனிட் மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்படும் என கூறினார்.
மேலும் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனால் ஆரணியை மாவட்டமாக எதிர்ப்பார்க்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.