மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் 3 கோடியே 51 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட, தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள கட்டபொம்மன் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மனோரா நினைவு சின்னம் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள டச்சுக் கல்லறை ஆகிய மூன்று நினைவு சின்னங்களை திறந்து வைத்தார்கள்.
Edapadi Palaniswamy Opened Kattapomman Port : ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின்படி, சுற்றுலாத் துறையின் மூலம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நினைவு சின்னங்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்டு, இப்பணிகளை மேற்கொள்வதற்காக 24 கோடியே 81 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் உள்ள கட்டபொம்மன் கோட்டையின் எஞ்சிய பகுதியை புனரமைத்து பாதுகாக்கும் வகையில், 92 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில், கோட்டையின் எஞ்சிய பகுதிகளை சுண்ணாம்பு கலவை கொண்டு சீர் செய்யப்பட்டு, சுற்றிலும் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை வசதி, பாதுகாவலர் அறை, புல்வெளித்தளம், மின்விளக்குகள், வழிக்காட்டு பலகைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சரபேந்திர ராஜபட்டினம் கிராமத்தில், எட்டு அடுக்குகளைக் கொண்ட 75 அடி உயரமுள்ள அறுகோண அமைப்புடைய மனோரா நினைவு சின்னத்தை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில், 2 கோடியே 33 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில், கோட்டையைச் சுற்றிலும் கற்கட்டுமானம் அமைக்கப்பட்டு, அதன்மேல் இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைத்து, குடிநீர் வசதி, பாதுகாவலர் அறை, புல்வெளித்தளம், மின்விளக்குகள், வழிக்காட்டு
பலகைகள், கண்காணிப்பு கேமிராக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள டச்சுக் கல்லறையை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில், 25 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில், கல்லறையை சீரமைத்து சுற்றிலும் கற்கட்டுமானத்துடன் கூடிய இரும்பிலான பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டு, புல்வெளித்தளம், வழிகாட்டிப் பலகைகள், மின் விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. விக்ரம் கபூர், இ.ஆ.ப., தொல்லியல் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் திரு.த.உதயச்சந்திரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்களை 5.10.2020 அன்று தலைமைச் செயலகத்தில், 2018-19ஆம் ஆண்டிற்கான தேசிய நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளை பெற்ற காரைக்குடி, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. மு.கூ. லோகநாதன் மற்றும் திருச்சிராப்பள்ளி, பிஷாப் ஹீபர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் திரு. ஆ. தர்ம சாஸ்தா ஆகியோர் சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.