Ananth Kumar : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவரும் ஆன அனந்தகுமார்(59) இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், இன்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மத்திய ரசாயன, உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம் அமைச்சராக இருந்த அனந்தகுமார் மறைவிற்கு தலைவர்கள் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவிற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவை கேட்டு நான் மிகவும் துன்புற்றேன்.
அவரது குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” இவ்வாறு கூறினார்
இதையடுத்து கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள செய்தியில், ” அனந்தகுமார் ஒரு மதிப்புமிக்க அரசியல்வாதி, எனக்கு நண்பரும் கூட.
எம். பி யாகவும் , மத்திய மந்திரியாகவும் அவர் தனது பணிகளை சிறப்பாக பங்காற்றியவர்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் அவரது குடும்பம் அவரின் இழப்பை தாங்கிக்கொள்ள இறைவனிடம் பிராத்திக்கிறேன்” இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதவது,” மத்திய மந்திரி அனந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ” இவ்வாறு பதிவிட்டிருந்தார் .