DMK Plans to Tamil Nadu Election : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் 2021-ல் நடைபெற உள்ளது. இதற்காக முக்கிய கட்சிகள் அனைத்தும் தற்போதிலிருந்தே தீயாக வேலை செய்ய தொடங்கியுள்ளன.
அதிலும் குறிப்பாக திமுக இம்முறையாவது எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக தினம் தினம் ஆளும் அதிமுக அரசு மீது குற்றம் சொல்லி அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
மேலும் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவனத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வேலைகளைச் செய்ய ரூபாய் 380 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் ஆட்சியைப் பிடிக்கவே ரூபாய் 380 கோடி செலவு செய்தால் இவர்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை எப்படி இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்தாரோ அதே டெக்னிக்கை தற்போது திமுக கையில் எடுத்துள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 184 இடங்களில் போட்டியிடும் எனவும், காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், அதற்கு அடுத்தபடியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 10 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 இடங்களிலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 7 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று இடங்களையும் ஒதுக்க வேண்டும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக இவர்கள் அனைவரையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விசிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலைப் போல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்களா? அல்லது எங்களின் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என போர்க்கொடி தூக்குவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.