CM Speech in Kadaiyanallur

கொரானா காலகட்டத்தில் மக்கள் மீது பதியப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

CM Speech in Kadaiyanallur : மத்திய அரசு, கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க கடந்த
25.03.2020 அன்று முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை
பிறப்பித்ததையடுத்து, தமிழக அரசும் பொதுமக்களின் நலனை கருதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதுடன், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் – 1939 மற்றும் தொற்று நோய் சட்டம் – 1937 ஆகிய சட்டங்களின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை
அறிவித்தது.

இதனையடுத்து காவல்துறையினர், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு
சோதனைச்சாவடிகள் அமைத்தும், வாகன தணிக்கை செய்தும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், கொரோனா தொற்று தொடர்பாக வதந்திகளை
பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர் மீது சட்டப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இது தொடர்பாக, மாநிலத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட
குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில்
இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி
செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள்
போன்றவைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கடையநல்லூரில் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, 1955ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், குடியுரிமை திருத்த மசோதா – 2019 ஐ கடந்த 04.12.2019 அன்று மக்களவையிலும், 11.12.2019 அன்று மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது.

இதனையடுத்து சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தில் பல
இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு, உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இப்போராட்டங்களின் போது காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு
ஏற்பாடுகளைச் செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்தனர். இப்போராட்டங்களின் போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு
ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் சுமார் 1,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக
பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவைத் தவிர மற்ற
அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள்
கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே போல் கூடங்குளம் போரோட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்த வழக்குகள் அனைத்தும் சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.