CM Edappadi Palanisamy Speech :
சென்னை: தமிழை பிரமாநிலங்களில் விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தற்சமயம் மத்திய அரசு கொண்டுவர உள்ள மும்மொழி கொள்கைக்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
‘பள்ளிகளில் 6 -ஆம் வகுப்பு முதல் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும்’ என தேசிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் கூறப்பட்டதற்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, தேசிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்துள்ள மத்திய அரசு, “இந்தி கட்டாயம் இல்லை” என அறிவித்துள்ளது.
இந்த தேசிய கல்வி கொள்கை, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைத்தது.
இந்நிலையில் அந்த குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது.
அந்த புதிய வரைவு கொள்கையை, மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.
அந்த வரைவு கொள்கையில், “மும்மொழி கொள்கை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில், ஆங்கிலத்துடன்,
இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்க வேண்டும். இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும்”என இருந்தது.
இந்த திட்டத்துக்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இது வரைவு கொள்கைத்தான்., இறுதி முடிவு எடுக்கப்படவில்லை…
இந்திய மொழிகளை முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் நோக்கம். எந்த மொழியையும் திணிப்பது நோக்கம் அல்ல(!?) என்று மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 3-ம் தேதி தேசிய கல்வி கொள்கை வரைவு திருத்தப்பட்டு நேற்று மீண்டும் வெளியிடப்பட்டது.
அதில், இந்தி கட்டாயம் என்ற பிரிவு மட்டும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மும்மொழி பிரமாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க வேண்டும்’ என டிவிட்டரில் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.