Chances to Rain in Tamilnadu :
சென்னை: தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கி, அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி தமிழக மக்களை வாட்டி வதைத்தது.
கத்திரி வெயில் குறைந்த பின்னரும் கூட, ஒரு சில இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலையே பதிவாகி வருகிறது. இதனால் அன்றாட வாழ்வில் மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள், வட, உள் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
மேலும் தென் மேற்கு பருவமழையின் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, நேற்று அதிகபட்சமாக மதுரை தெற்கில் 102.20 டிகிரி பாரன்ஹீட், மதுரை விமான நிலையத்தில் 101.48,
திருச்சியில் 101.30, தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினத்தில் 100.40 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அதே சமயம், ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த புயலால் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று கூறியதாவது, அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நிலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நிலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.