நாங்குநேரி: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி, நடந்து வருகிறது.
51 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்க உள்ளது.. இந்நிலையில் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி, நடந்து வருகிறது. இன்று நடக்கும் தேர்தலுக்கான முடிவுகள் வரும் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
மேலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் எச். வசந்தகுமார். இவர் கன்னியகுமாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்வானார். இதனால் தன்னுடைய நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருந்ததால், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் காரணமாக, அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் , நாங்குநேரியில் இன்று தேர்தல் நடக்கிறது. நாங்குநேரியில், அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார் மற்றும் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்கள் எண்ணிக்கை பொறுத்தவரையில், மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, பாதுகாப்பிற்காக 800 போலிசார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பல தலைவர்கள் இங்கு தீவிர பிரச்சாரம் செய்தனர். கடந்த ஒரு மாத காலமாக, இத்தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்றது.