இயக்குனர் அட்லீ பிகில் பட பட்ஜெட்டை இழுத்துவிட்டார் என வெளியான செய்தி குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்துள்ளார்.
ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யரான இவர் ஷங்கரைப் போலவே அதிகமான பட்ஜெட்டில் திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஆனால், கூறிய பட்ஜெட்டைவிட அதிக செலவை இவர் இழுத்து விடுவதாக தொடர்ந்து இவர் மீது புகார் இருந்து வருகிறது.
விஜயை வைத்து இவர் இதற்கு முன்பு இயக்கிய தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்களிலும் கூறிய பட்ஜெட்டை விட பல கோடி அதிக பட்ஜெட்டில் படத்தை முடித்ததால் தயாரிப்பாளர்களுக்கு எந்த லாபமும் கிடைக்கைவில்லை எனக்கூறப்பட்டது. பிகில் படத்திலும் கூறிய பட்ஜெட்டை விட 2 மடங்கு அதிகமான பட்ஜெட்டிலேதான் படத்தை முடித்தார் எனவும் கூறப்பட்டது. அதோடு தமிழ் பட தயாரிப்பாளர்கள் தரப்பில் அட்லீக்கு ரெட் கார்டு விதிக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ‘ஒரு தயாரிப்பாளருக்கு ஒரு படம் நன்றாக வரவேண்டும். அதுதான் முக்கியம். தயாரிப்பு செலவு என்பது இயக்குனருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே சம்பந்தப்பட்டது. நாங்கள் பணம் கொடுக்கவில்லை எனில் அவரால் எடுக்க முடியாது. நம்பிக்கை இருப்பதால்தான் செலவு செய்கிறோம். இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றது. ஆச்சர்யபடும்படியான படத்தை அட்லீ கொடுத்துள்ளார். படம் நினைத்தபடி வரவேண்டுமானால் செலவு செய்துதான் ஆக வேண்டும். கடைசியில் படமே பேசும். அதுதான் முக்கியம்’ என அவர் பேசியுள்ளார்.