மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Amma Jayalalithaa Statue Opening : சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 9 அடி உயரம் கொண்ட சிலையை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பின்னர், பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கல்வித்துறையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.
அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சென்னை மெரினா கடற்கரை சாலை பகுதியில் தங்களது தலைவிக்கு சிலை அமைக்கப்பட்டடுள்ளதை பெருமிதத்துடன் கண்டு செல்கின்றனர் அ.தி.மு.கவினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் நினைவு இல்லம் திறக்கப்பட்டதை தொடர்ந்து மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள மறைந்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை திறப்பு என அ.தி.மு.கவினரின் கனவு நிறைவேறியுள்ளதாக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்