America Theatre Owners About Master

மாஸ்டர் படக்குழுவினருக்கு அமெரிக்க திரையரங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

America Theatre Owners About Master : சுமார் 1 வருடம் கழித்து திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளது எனலாம். ‘மாஸ்டர்’ திரைப்படம் அனைத்து திரையரங்குகளில் வாத்தி ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது.

சுமார் ஒராண்டு காலமாக எந்தவொரு படமும் வெளியாகாமல், வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் இன்றைய மக்கள் வெள்ளம் திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் துல்லியமான இயக்கத்தில், தளபதி விஜய் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து அசத்தியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் திரையரங்க உரிமையாளர்களைச் சந்தோஷப்படுத்தவில்லை. வெளிநாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்களையும் சந்தோஷப்படுத்தியுள்ளது.

‘மாஸ்டர்’ உரிமையை வைத்துள்ள லலித் குமாரிடமிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வெளியீட்டு உரிமையை ஹம்சினி எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியது. இந்த நிறுவனம் பல்வேறு படங்களைச் சரியான நேரத்தில், திரையரங்குகள் எண்ணிக்கையில் வெளியிட்டு வெற்றியைச் சாத்தியமாக்கி வருகிறது.

‘மாஸ்டர்’ உரிமையை வாங்கிவிட்டு, சுமார் 12 மாதங்கள் கழித்து கச்சிதமாகப் பேசி திரையரங்குகளைக் கைப்பற்றி வெளியிட்டுள்ளது ஹம்சினி எண்டர்டையின்மெண்ட்.

அந்த நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளரான விவேக் ரவிச்சந்திரன் ‘மாஸ்டர்’ படத்துக்கு வெளிநாடுகளில் கிடைத்துள்ள வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கிறார்.

இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, “இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட்டோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது ‘மாஸ்டர்’.

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் சர்ச்சை, கொரோனா அச்சுறுத்தல் எனப் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் கலிபோர்னியா மாகாணத்தில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதர மாகாணங்களில் மட்டுமே ‘மாஸ்டர்’ படத்தை வெளியிட்டோம். அங்கும் எங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தளபதி விஜய் என்றாலே அனைவருக்கும் தெரிந்துள்ளது.

குறிப்பாக, மாஸ்டர்’ படக்குழுவினரைப் பாராட்டி சினிமார்க் மற்றும் ஏ.எம்.சி திரையரங்க நிர்வாகம் இ-மெயில் அனுப்பியுள்ளனர். இந்தக் கடினமான காலகட்டத்தில் எங்களுக்குப் பொக்கிஷமாக படம் கொடுத்து உதவி புரிந்தமைக்கும் நன்றி, இந்தச் சிக்கலான காலகட்டத்தில் இவ்வளவு காலம் காத்திருந்து திரையரங்க வெளியீட்டை மட்டுமே முன்னிலைப்படுத்தி வெளியிட்டுள்ளதற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால், ‘வொண்டர் வுமன்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களே திரையரங்குகளில் வெளியான அன்று ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது. அப்படி எந்தவொரு முயற்சியும் எடுக்காமல், திரையரங்கிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ள ‘மாஸ்டர்’ படக்குழுவினருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்காக ‘மாஸ்டர்’ படத்துக்கு எங்களது ஆதரவு உண்டு என்று சுமார் 90% திரையரங்குகளை ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

அமெரிக்காவில் 30% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. அங்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ‘மாஸ்டர்’. எங்களது ஹம்சினி எண்டர்டையின்மெண்ட் நிறுவனத்தின் மீதும் நம்பிக்கை வைத்து திரையரங்குகள் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் எந்தவொரு தென்னிந்தியப் படமும் பண்ணாத முதல் நாள் வசூலைச் செய்துள்ளது. அதிலும் 50% இருக்கைகள் அனுமதியில் செய்திருப்பதால் நாங்கள் கூடுதல் உற்சாகமாகியுள்ளோம்.

விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் விஜய் படம் என்றவுடன் உற்சாகமாகிவிட்டார்கள். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுமார் 90% திரையரங்குகளில் ‘மாஸ்டர்’ வெளியாகியுள்ளது.

இதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து திரையரங்குகள் கொடுத்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால், இதுவரை இவ்வளவு திரையரங்குகளில் எந்தவொரு தமிழ்ப் படமும் வெளியானதில்லை. அந்த முயற்சி ஹம்சினி எண்டர்டையிமெண்ட் நிறுவனத்தால் சாத்தியமாகியுள்ளதில் மகிழ்ச்சி.

தமிழகத்தில் மட்டும் ‘மாஸ்டர்’ வாகை சூடவில்லை, வெளிநாடுகளில் வாகை சூடி வெற்றி நடை போட்டு வருகிறார் தளபதி விஜய். எங்களது ஹம்சினி எண்டர்டையின்மெண்ட் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து எங்களுக்கு வெளிநாட்டு உரிமையை வழங்கிய லலித் குமார் அவர்களுக்கு நன்றி.

தொடர்ந்து நல்ல படங்களை வாங்கி சிறப்பான முறையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு ‘மாஸ்டர்’ ஒரு முன்னோட்டமாக அமைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார் விவேக் ரவிச்சந்திரன்.