தாம்பரம்: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் விரைவில் காவி கொடி ஏற்றுவோம் என்று சிவசேனா கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரேவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழக சிவசேனா கட்சி சார்பில், மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று பால்தாக்கரேவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது அம்மாநில தலைவர் ரவிச்சந்திரன் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் விரைவில் காவிக் கொடி ஏற்றப்பட வேண்டும்., இதனை
உடனடியாக செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு தமிழக அரசு தமிழகத்தில் உள்ள கோவில்களில் காவி கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சிவசேனா கட்சியே அனைத்து கோயில்களிலும் காவி கொடியை ஏற்றும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது தமிழக அரசுக்கு சிவசேனா சார்பில் விடப்படும் சவால்’’ எனவும் மாநில தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தேசிய அமைப்பாளர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் செந்தில், மனோஜ், வேணுகோபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.